வாய்மை : திருக்குறள் | Vaaymai – The Profound Meaning of Truthfulness: Thirukkural
வாய்மை
1. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
விளக்கம்: வாய்மை என்பது மற்றவர்களுக்கு தீமை பயக்கும் சொற்களை பேசாமல் நன்மை செய்வதே ஆகும்.
2. பொய்மையும் வாய்மை இடத்து புரைதீர்த்த
நன்மை பயக்கும் எனின்.
விளக்கம்: ஒருவனுக்கு பொய்யான ஒன்றினை கூறி அவனுக்கு நன்மை பயக்கும் என்றால், அதுவே வாய்மை எனப்படும்.
3. தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
விளக்கம்: ஒருவன் மனசாட்சிக்கு விரோதமாக பொய் கூறினால் அதுவே அவன் நெஞ்சை வருத்தி கொண்டிருக்கும்.
4. உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
விளக்கம்: ஒருவன் பொய் கூறாது வாழ்ந்தால் அவனை இவ்வுலகம் பாராட்டும். எல்லார் உள்ளங்களிலும் இருப்பான்.
5. மனத்தோடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம்செய் வாரின் தலை.
விளக்கம்: உள்ளத்திலும் பேச்சிலும் தூய்மையாக இருப்பவரை தானம் தவம் செய்பவரை காட்டிலும் உயர்வாக கருதுவர்.
6. பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.
விளக்கம்: ஒருவன் எந்த சூழ்நிலையிலும் பொய் பேசாமல் இருந்தால் அவனுக்கு புகழும் நன்மையும் வந்து சேரும்.
7. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
விளக்கம்: பொய் சொல்லாது வாழ்ந்தால் தான தர்மங்கள் செய்யாமல் எல்லா அறங்களும் ஒரு சேர வந்து விடும்.
8. புறந்தூய்மை நீரினால் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
விளக்கம்: உடம்பு நீரால் தூய்மை அடையும், அதுபோல மனம் வாய்மையால் தூய்மை அடையும்.
9. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
விளக்கம்: விளக்கானது இருளை நீக்கி வெளிச்சத்தை தருவது போல வாய்மை என்னும் விளக்கு சான்றோர்க்கு நல்ல புகழை தரும்.
10. யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
விளக்கம்: உண்மை பேசுவதே இவ்வுலகில் பெரிய அறமாக கருதப்படுகிறது. அதுவே வாய்மையின் தலைமை பண்பாக விளங்குகிறது.