ஒழுக்கமுடைமை: திருக்குறள் | Ozhukkamudaimai – Moral Conduct: Thirukkural
ஒழுக்கமுடைமை
(நல்ல நடத்தை உடையவராதல்)
1. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
விளக்கம்: ஒருவனுக்கு அனைத்து சிறப்புகளையும் தருவது ஒழுக்கமே, அவ்வொழுக்கத்தை உயிரினும் மேலானதாக கருதி காத்துக்கொள்ள வேண்டும்.
2. புரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
விளக்கம்: ஒருவன் ஒழுக்கமாக நடப்பது கடினமானது ஒழுக்கத்தோடு நடந்தால் அது அவனுக்கு நல்ல துணை தரும்.
3. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
விளக்கம்: ஒருவன் ஒழுக்கமாக இருந்தால் அது அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் பெருமை தரும். ஒழுக்கம் இல்லாதிருந்தால் உயர் குடியில் பிறந்தாலும் இழிவாக பேசப்படுவர்.
4. மறப்பினு மோத்துக் கொள்ளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
விளக்கம்: ஒருவன் கற்ற கல்வியை மறந்து விட்டால் மீண்டும் கற்றுக் கொள்ள முடியும், ஆனால் ஒழுக்கத்தை இழந்து விட்டால் அது அவன் சிறப்பை அளித்து விடும்.
5. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.
விளக்கம்: பொறாமைக்குணம் உடையவரிடம் வளர்ச்சி இருக்காது, அதுபோல ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு இருக்காது.
6. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.
விளக்கம்: ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை அறிந்தவர்கள் அவ்வொழுக்கத்திலிருந்து தன்னை காத்துக் கொள்வார்கள்.
7. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் ஏய்தாப் பழி.
விளக்கம்: ஒழுக்கம் உடையவர்களை இவ்வுலகம் புகழ்ந்து பாராட்டும், ஒழுக்கம் இல்லாதவர்கள் செய்யாத குற்றங்களுக்கு பழியும் பாவமும் அடைவார்.
8. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
விளக்கம்: நல்ல ஒழுக்கம் என்பது நன்மையை தரும் விதையாகும். தீய ஒழுக்கம் என்பது துன்பத்தை விளைவிக்கும்.
9. ஒழுக்கம் உடையவர்க் கொள்ளாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
விளக்கம்: ஒழுக்கம் உடையவர்கள் தம் வாயினால் பிறருக்கு தீமை தரும் சொற்களை பேச மாட்டார்கள்.
10. உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
விளக்கம்: ஒழுக்கம் இல்லாதவர்கள் உலகில் கல்வியை எவ்வளவு கற்றாலும் அறிவில்லாதவராகவே கருதப்படுவார்.