செய்நன்றி அறிதல்: திருக்குறள் | Seynanri-arithal – gratitude and duty : Thirukkural
செய்நன்றி அறிதல்
1. செய்யாமற் செய்த உதவிக்கு வையகமுவும்
வானகமும் ஆற்றல் அரிது.
விளக்கம்: நாம் பிறருக்கு ஒரு உதவியும் செய்யாதிருக்க பிறர் செய்கின்ற உதவிக்கு இந்த மண்ணுலகமும் வானுலகமும் ஈடாகாது.
2. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
விளக்கம்: வேண்டிய காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் அது செய்யப்பட்ட காலத்தை ஆராய்ந்து பார்த்தால் இவ்வுலகத்தை விட பெரியதாகும்.
3. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
விளக்கம்: எந்தப் பயனையும் எதிர்பார்க்காமல் செய்கின்ற உதவி கடலை விட பெரியதாகும்.
4. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன் தெரிவார்.
விளக்கம்: ஒருவன் தினை அளவு உதவி செய்தாலும் அப்பயனை உணர்ந்தவர் அவ்உதவியை பனை அளவாக கருதி போற்றுவர்.
5. உதவி வரைத்தன் றுதவி உதவி
செய்யப்பட்டார் சால்பின் மறைத்து.
விளக்கம்: ஒருவருக்கு செய்யும் உதவி அவ்வுதயின் அளவை வைத்து மதிக்கக்கூடாது அவ்வுதவி செய்யப்பட்டவரின் தன்மையை வைத்து மதிக்க வேண்டும்.
6. மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயர் நட்பு.
விளக்கம்: துன்பம் வந்த காலத்தில் நமக்கு உதவி செய்தவரின் நட்பை கைவிடக்கூடாது அது நமக்கு பாதுகாப்பாக இருக்கும்.
7. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
விளக்கம்: நமக்கு துன்பம் நிறைந்த காலத்தில் உதவி செய்தவரின் நட்பை ஏழு பிறவிகளிலும் மறக்க கூடாது.
8. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று.
விளக்கம்: பிறர் செய்த உதவியை எப்பொழுதும் மறக்க கூடாது ஆனால் அவர் செய்த தீமையை அப்பொழுதே மறந்து விட வேண்டும்.
9. கொன்றென்ன இன்னா செய்யினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்.
விளக்கம்: உதவி செய்த ஒருவர் கொலை குற்றம் செய்தாலும் அவர் முன்பு செய்த நன்மையை நினைக்க தீமை மறைந்து விடும்.
10. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
விளக்கம்: எவ்வித தவறு செய்தவனுக்கும் தப்பிக்க வழிகள் உண்டு. ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தவனுக்கு அதிலிருந்து தப்ப வழி இல்லையாம்.